இலங்கையர்களே அவதானம்!! ஒமைக்ரோனின் பரவல் 95 வீதத்தை எட்டியது
இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 நோயாளர்களில் 95 வீதமானோர் ஒமைக்ரோன் வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதை ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 100 வீதமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன, அதனை நாட்டின் சுகாதார கட்டமைப்பினால் நிர்வகிக்க முடியாமல் போகும் ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும் இதனை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, எந்தவொரு புதிய விகாரமடைந்த வைரசும் நாட்டிற்குள் பிரவேசிக்குமாயின் அதனை கட்டுப்படுத்தும் திறன், சுகாதார கட்டமைப்புக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்கள், மூன்று கட்ட கொரோனா தடுப்பூசி மருந்தையும் பெற்றிருந்தால், கடுமையான பிரச்சினைகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுவதாகவும் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதுவரை கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், உடனடியாக அதனைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தடுப்பூசிகள் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக உப்புல் ரோஹன மேலும் தெரிவித்தார்.
