உண்மைகளை மறைக்கிறதா அரசு? நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல் - குழப்பம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியமைக்கு தலைமை வகித்ததாக அரசாங்கத்தினால் நௌபர் மௌலவியின் பெயர் அறிவிக்கப்பட்டாலும், அவரிடம் ஏன் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்யவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, இந்த கேள்வியை முன்வைத்தார். இதன் காரணமாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதன்போது மேலும் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ,
ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணையயை நடத்திய சானி அபேசேகர, முதலாவதாக புலனாய்வு அதிகாரி ஒருவரையே கைது செய்திருந்தார். ஐ.பி முகவரி ஊடாக இவர் கைதாகிய நிலையிலும், இராணுவத்தினர் அவரை அழைத்து சென்றிருந்தனர்.
இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 07 பேரும் தான் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய முதல் விசாரணைகளை நடத்தியவர்கள்.
மாத்தளையைச் சேர்ந்த சிறிய சஹ்ரான் என்பவருடன் சொனிக் என்ற புனைப் பெயரில் பலர் பேச்சு நடத்தியுள்ளனர். சி.ஐ கீர்த்திசிங்க என்பவரே இந்த சிறிய சஹ்ரானை கைது செய்தார்.
நௌபர் மௌலவி மற்றும் இந்தச் சிறிய சஹ்ரானிடம் இதுவரை ஆணைக்குழு விசாரணை நடத்தியிருக்கவில்லை.
இன்று புலனாய்வுப் பிரிவை தனிநபர் ஒருவரே கட்டுப்படுத்துகின்றார். அரச தலைவரின் பிரதிநதியே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்றுவருகின்றார்.
இன்றுவரை நௌபர் மௌலவி மற்றும் சிறிய சஹ்ரானிடம் ஏன் ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவில்லை? அரசாங்கம் தகவல்களை மறைப்பதற்கே செயற்பட்டிருப்பது இதன் ஊடாக ஊர்ஜிதமாகிவிட்டது என்றார்.