ஏமாற்றப்பட்டது சிறிலங்கா நாடாளுமன்றம் - உண்மையை அம்பலப்படுத்திய ஆளுநர்!
நாடாளுமன்றத்திற்கு தவறான மதிப்பீடுகளை சமர்ப்பித்தமையே கடன்பொறிக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் அச்சிடுதல் அல்லது ஏனைய நிதி பல்வேறு வழிகளில் வருவாய் மதிப்பீடு காட்டப்பட்டுள்ளமையால், செலவீனங்களுக்கு ஏற்ப கடனை அதிகரிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகவே கடன் பொறி உருவானது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த அவர்,
தவறான மதிப்பீடுகளை சமர்ப்பித்து திறைசேரி, நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக நாடாளுமன்ற பொது நிதி தொடர்பான குழுவிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆகவே யதார்த்தமற்ற முறையில் அதிக வருவாய் மதிப்பீடுகள் நாடாளுமன்றுக்கு காட்டப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே குறைக்க முடியாத செலவீனங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.
இது உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தும், தவறான மதிப்பீடுகளைச் சமர்ப்பித்து நாடாளுமன்றம், தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கூறப்பட்டபடி, வருமானம் வெளிப்படையாக வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக மாத்திரம் இலங்கைக்கு சுமார் 600 அல்லது 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மின்சார சபை, எரிவாயு நிறுவனம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு போதுமான ரூபாய்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.