குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சமயம் இதுவல்ல-மக்கள் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்!
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார்.
20வது திருத்தத்தை நீக்கி 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதே பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வாக இருக்கும் என அவர் கூறுகிறார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு சிறந்த புரிதல் உள்ளது.
வரலாறு முழுவதும் எமது நாடு எதிர்நோக்கி பொருளாதார சவால்கள் தற்போது கடினமான நிலைமைக்கு வந்துள்ளது.
அரசாங்கம் எப்போது விரும்பி மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்காது. எனினும் நாட்டு மக்கள் இன்று பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மின்சார துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு என்பன எமக்கு கண்ணுக்கு தெரியும் கஷ்டங்கள் மாத்திரமே. இதனால் ஏற்பட்டுள்ள பல கஷ்டங்களையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை நான் அறிவேன்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இது என நான் நினைக்கின்றேன். அரசியல் ரீதியாக குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சமயம் இதுவல்ல என நான் நம்புகிறேன்.
எம் அனைவரையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். யார் உண்மையில் நாட்டை நேசிக்கின்றனர் என்பது தொடர்பில் மக்கள் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்பில் இருந்து நாங்கள் விலக முடியாது.
அத்துடன் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக முன்வைக்க வேண்டியது அவசியம். அரசியல் ரீதியாக எமக்கு இருக்கும் கொள்கை முரண்பாடுகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதன் காரணமாகவே ஆளும் கட்சியுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன் வருமாறு நாங்கள் எதிர்க்கட்சியினருக்கு நேர்மையாக நோக்கத்தில் அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பில் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை.
நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் பொருளாதார முகாமைத்துவம் மிக முக்கியம். இதற்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை நாங்கள் நியமித்துள்ளோம்.
அது மட்டுமல்லது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு சாதகமான பதில்கள் கிடைத்து வருகின்றன.
அத்துடன் எமது நட்பு நாடுகள் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய எமக்கு உதவி வருகின்றன. நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சு நாட்டுக்காக தற்போது தமது கடமைகளை சரியாக செய்து வருகின்றனர்.
நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வை காண்பதுடன் மீண்டும் இப்படியான நெருக்கடி ஏற்படாத வகையில் நிரந்த தீர்வுக்காண அடித்தளத்தை இட வேண்டும். எதிர்ப்புக்கு அப்பால் சென்ற தலையீடு அவசியம் என்பதை இதன் காரணமாகவே இதற்கு முன்னர் நான் நினைவு கூரியிருந்தேன்.
பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நாம் தீர்வு காண வேண்டும். காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் இதற்கு முன்னர் அழைப்பு விடுத்தேன்.
அவர்களிடம் இருக்கும் பெறுமதியான ஆலோசனைகளை பெற்று தலையீடுகளை மேற்கொள்ள நாம் முன்வந்தோம் என்பதை நினைவூட்ட வேண்டும். உரிய காலத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படமை மின் துண்டிப்பு ஒரு காரணமாக அமைந்தது.
இந்த தவறை கடந்த காலத்தின் மீது சுமத்தி பயனில்லை. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாலும் மலையக பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பதை கூற முடியாவிட்டாலும் விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பது முக்கியமானது. நிமிடம் நிமிடமாகவேனும் நாங்கள் மின் துண்டிப்பை குறைப்போம்.
எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரச தலைவர் நேற்று நாட்டு மக்களுக்கு கூறினார். எரிபொருள் கிடைக்கும் என்பதால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று சந்தேகம் கொள்ள வேண்டாம்.
24 மணி நேரத்தில் தீர்வு கிடைக்காவிட்டாலும் நீண்டகாலத்திற்கு நாங்கள் மக்களை வரிசைகளில் நிற்க வைக்க இடமளிக்க மாட்டோம் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் போது நாட்டின் அரசியல், சமூக ஸ்திரத்தன்மை என்பது மிக முக்கியமானது. அதற்காக எடுக்க வேண்டிய உடனடியான செயற்பாடடு ரீதியான தீர்வாக அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என நான் நம்புகிறேன்.
19வது திருத்தச் சட்டத்தை காலத்திற்கேற்ற திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியாக நடைமுறைப்படுத்துவது குறுகிய காலத்தில் எடுக்கக் கூடிய காலத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
அரச தலைவரின் ஆசியுடன் விரிவான அரசியலமைப்புத் திருத்தம் நோக்கி நாம் செல்ல வேண்டும். இதற்காக கட்சி பேதமின்றி அனைத்து மக்களின் ஆதரவு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.