இலங்கை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கை!
நாடளாவிய ரீதியில் சனத் தொகையை விடவும் அதிகளவான வெற்று சாராய போத்தல்கள் சுற்றாடலில் சேர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
பயன்படுத்தப்படும் சாராய போத்தல்களில் 5 வீதம் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. சாராய போத்தல்களால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு சம்பந்தமாக உழவர்கள், கமத்தொழில் அமைப்புகள் உட்பட பலத்தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் எனவும் சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 2018 ஆம் ஆண்டு10 கோடிக்கு அதிகமான 180 மில்லி லீற்றர் (கால் போத்தல்) வெற்று சாராய போத்தல்கள் சுற்றாடலுக்குள் சேர்ந்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் 10 கோடியே 55 லட்சத்து 32 ஆயிரத்து 169 கால் போத்தல் அதாவது 180 மில்லி லீற்றர் சாராய போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அந்த போத்தல்கள் அனைத்து சுற்றாடலுக்குள் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு 20 கோடியே 12 லட்சத்து 27 ஆயிரத்து 181 சாராய போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 52 வீதமானவை 180 மில்லி லீற்றர் சாராய போத்தல்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், சுற்றாடலுக்கு ஏற்படும் அழிவை தடுப்பதற்காக உடனடியாக 180 மில்லி லீற்றர் போத்தல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.