பாரிய திட்டமொன்றுக்கு அடியெடுத்து வைக்கும் சிறிலங்கா காவல்துறை!
நாட்டில் வீதி விபத்துகள் ஏற்படக்கூடிய அனைத்து ஆபத்தான இடங்களையும் கண்டறிந்து அவற்றைப் பாதுகாப்பானதாக மாற்ற தவறும் அனைத்து காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்துப் பொறுப்பதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை அனைத்து காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பிரதி காவல்துறை மா அதிபர் ஏற்கனவே பிறப்பித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
நாட்டின் அறுநூற்று ஏழு காவல் பிரிவுகளிலும் உள்ள ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அவற்றைப் பாதுகாப்பாக வைப்பது ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்துப் பொறுப்பதிகாரிகளின் பொறுப்பு என்று வடமேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை பொறுப்பதிகாரி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விபத்துகள் மீண்டும் பதிவாகும் பகுதிகளில் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் போக்குவரத்துப் பொறுப்பாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொத்மலை விபத்து
கொத்மலை- கெரண்டியெல்ல பேருந்து விபத்து குறித்த நிபுணர்குழு அறிக்கை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்றபோது அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் வீதிகளில் எழுநூற்று எழுபத்தொன்பது மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான இடங்கள் இருப்பதாகவும் இந்த இடங்களை பாதுகாப்பானதாக மாற்றவீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
