நாட்டில் பாரிய நெருக்கடி- தயாரானது ரணிலால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை!
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நாட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார எரிபொருள் நெருக்கடிக்கான காரணம் அதனை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பிலான அறிக்கையைத் தயார் செய்துள்ளதாகவும் அதனை பிரதமரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரங்கள் மற்றும் பெற்றோலிய வளம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார கையொப்பமிட்ட அறிக்கையில், பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுடன் ஆலோசிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் கூட்டமொன்றைக் கூட்டி ஏற்கனவே அதற்கான அறிக்கைகள் தொகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விரிவான செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோாடு, இதன் சாதகத்தன்மையை மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.