கோட்டாபயவின் அரசியல் அனுபவம் தொடர்பில் விமர்சனம் செய்யும் இராஜாங்க அமைச்சர்!
எரிவாயு நிறுவனங்களில் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டிய தலைவர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படாமை பிரச்சினைக்குரியது. இது அரச தலைவர் செய்யும் மிகப் பெரிய தவறு என இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் பாரிய சமையல் எரிவாயு பிரச்சினை மற்றும் எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு நேரடியாக பொறுப்புக் கூறவேண்டிய எரிவாயு நிறுவனத் தலைவர்கள் பதவி நீக்கப்படாமையானது பாரிய தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட்டு வரும் நிலைமையில், சரியானதை சரி எனவும் தவறானதை தவறு எனவும் நேரடியாக பேசும் நானும் எதிர்காலத்தில் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரச தலைவருக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால், சில அரசியல் விடயங்களை காலம் கடந்து புரிந்துகொள்கிறார்.
கல்வி கற்றவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஆரம்பத்தில் நினைத்தாலும் கல்வி கற்றவர்கள் என்பதால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தற்போது அவர் கூறுகிறார் எனவும் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
