ராஜபக்ச அரசாங்கம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தாக்குதல்- வெளியான அறிக்கை!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்தகால உரிமைகளை மாற்றியமைத்ததாகவும், கடுமையான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை பாதுகாத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2021இல் சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கியதோடு, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியமை மற்றும் ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உலக அறிக்கை 2022இல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் அதன் சர்வதேச பங்காளிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டதோடு, கடந்தகால போர்க்குற்றங்கள் உட்பட பாரதூரமான மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்தகால உரிமைகள் மேம்பாடுகளை மாற்றியமைக்கவும், கடுமையான துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும் கோட்டாபய ராஜபக்ச உறுதியாக இருப்பதாக தெரிவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமர்சனங்களை குறைக்க சீர்திருத்தங்கள் மற்றும் நீதியை உறுதியளிக்கும் அதே வேளையில், அவரது நிர்வாகம் சிறுபான்மை சமூகங்களை ஒடுக்குவதை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 32ஆவது பதிப்பாக வெளிவந்துள்ள, 2022ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கை 752 பக்கங்களைக் கொண்டுள்ளதோடு, மனித உரிமைகள் கண்காணிப்பு சுமார் 100 நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்கிறது.
ராஜபக்ச அரசாங்கம் தனது சொந்த சீர்திருத்த உறுதிமொழிகளை புறக்கணித்து, சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மத சுதந்திரம், சிறுபான்மை மக்களின் நில உரிமைகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொள்கைகளை அரசாங்கம் பயன்படுத்துவதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கடந்தகால துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் துன்புறுத்தியதாகவும் அச்சுறுத்தியதாகவும், அமைதியான போராட்டங்களை நசுக்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்பு முகவர் அமைப்புகள், சிவில் சமூக குழுக்களை ஊடுருவி கண்காணித்து அச்சுறுத்தி, பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடும் போர்வையில் அவர்களின் நிதி ஆதாரங்களில் தலையீடு செய்வதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உலக அறிக்கை 2022இல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.