ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட முக்கிய செயற்பாட்டாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டா கோ ஹோம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களான லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் மற்றும் யூடியூபர் ரதிந்து சேனாரத்ன ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேடப்பட்ட கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்
கொழும்பில் கடந்த ஜுன் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கோட்டா கோ ஹோம் செயற்பாட்டாளர்கள் தேடப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து மருதானை காவல்துறை நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பிணையில் விடுதலை
இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கோட்டை நீதவான் நீதிமன்றம் சந்தேக நபர்களை பிரத்தியேக பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.
கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.