நாடு போராட்ட பூமியாக மாறியதன் விளைவே கோட்டாபயவின் வெளியேற்றம் - ரணிலுக்கும் வலுக்கும் அழுத்தம்!
நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினத்தை எதிர்ப்பு தினமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே அறிவிப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவின் பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள நகரங்களில் போராட்டங்களை நடத்த கோரிக்கை
ஆகவே இன்றைய தினத்தில் இருந்து தமக்கு அருகில் உள்ள நகரங்களில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் முழு நாடும் போராட்ட பூமியாக மாறியதன் காரணமாகவே முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்க முடிந்தது.
வெற்றிகரமாக நிறைவடையும்
இந்த நிலையில், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து விலக்குவதற்காக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்பு மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் இந்த போராட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் எனவும் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.