பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களில் மருத்துவப்பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேற்குறித்த அதிகரிப்பு 2020 ஆம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே 2020ஆம் ஆண்டு உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 1, 974 மாணவர்கள் மருத்துவபீடங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 110 மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க (Sampath Amaratunge) தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2018 ஆம் ஆண்டு 1, 480 மாணவர்கள் மருத்துவபீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், 2019 ஆம் ஆண்டு 1, 961 மாணவர்கள் உள்வாங்கப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆயினும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களிலிருந்து 43, 500 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
