இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பு - அதிபர் ரணில் தெரிவித்த முக்கிய விடயங்கள்
இலங்கை பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய அதிபர், அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவுசெய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக கல்வியின் பங்கு
மேலும் கருத்து தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க,
“பல்கலைக்கழகக் கல்வியின் பங்கு என்ன என்பது தொடர்பில் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் மேலதிகமாக 25,000-30,000 பேரை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகக் கட்டமைப்பு ஒன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன.மேலும், இலாபமீட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழகக் கட்டமைப்பும் உள்ளது.
எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழகக் கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேறுகின்ற வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே தற்போதுள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பை அப்படியே தொடர்வதா? அல்லது தேவையான மாற்றங்கள் செய்வதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.” என தெரிவித்தார்.
