இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கூட நாடு இவ்வளவு மோசமாக இருந்ததில்லை!
சிறிலங்காவில் நிலவும் நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிருலப்பனையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை உயர்த்துவதற்கு அனைத்து தரப்புக்களுக்கும் இடையில் தேசிய உடன்பாடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார். இதேவேளை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கூட சிறிலங்காவின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்குத் தீர்வு காண அரசாங்கம் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளதுடன், தீர்வுகளை வழங்கத் தவறியதால், நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சருக்கும் சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகக் கூறியுள்ள அவர், அதனை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும், அது இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பதிலாக தற்போதுள்ள நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கட்சி வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், நெருக்கடியை தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் வலுவான உடன்பாடு எட்டப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
