சம்மதம் தெரிவித்தும் நடைமுறைப்படுத்தப்படாத கோரிக்கை- கோசங்களுடன் ஆர்ப்பாட்டம்!
சுகாதார துறைசார்ந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சம்பள முரன்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்த்து வைக்குமாறு தெரிவித்து இன்று இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு சம்மதம் தெரிவித்திருந்தது. எனினும் மூன்று மாதகாலமாகியும் அது நடைமுறைப்படுத்தப்படாமையினால் நாம் இந்த போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.
எனவே எமது சம்பள முரன்பாட்டை உடனடியாக தீர்த்து சம்பள உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துமாறும் கோரியுள்ளனர். எமது பதவி உயர்வானது முன்னர் ஆறு வருடங்களில் பரிசீலிக்கப்பட்டு தற்போது பத்து வருடங்களில் பரிசீலிக்கப்படுகின்றது.
எனவே அதனை ஆறுவருடங்களில் பரிசீலிக்குமாறும் நாம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன் சம்பள உடன்படிக்கையை அமுல்படுத்து, டி.ஏ.ரியை10 ஆயிரமாக அதிகரி, பதவி உயர்வு முரன்பாடுகளை தீர்த்துவை, மருந்துகளின் விலைகளை குறை போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.