வவுனியாவில் ஆலயத்திற்குள் இடம்பெற்ற கோர சம்பவம் - ஆண்கள் பெண்கள் உட்பட பலர் காவல்துறையால் கைது!
வவுனியா பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கடந்த 10 தினங்களாக வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தில் குழுவினருக்கிடையில் மோதல்
நேற்று முன்தினம் மாலை திருவிழாவின் போது ஆலயத்தில் நின்ற சிலருக்கும், ஆலய பகுதிக்கு வந்த பிறிதொரு குழுவினருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே நேற்று ஆலயத்தில் கொடி இறக்குவதற்கான பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதுடன், வாள் வெட்டுத் தாக்குதல்களும் இடம்பெற்றன.
இச்சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் வவுனியா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கலாக 20 பேர் வரையில் நெளுக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையத்திற்கு முன் திரண்ட மக்கள்
அதேவேளை குறித்த பகுதியில் இருந்து வாள்களும் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆலய தலைவரை விடுவித்த பின்னேர ஆலயத்தின் கொடி இறக்கப்படும் எனத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு முன் திரண்டுள்ளனர்.
அதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


