வவுனியாவில் பதற்றம்- ஆசிரியர் மீது கொடூரத் தாக்குதல்!
வவுனியா - வீரபுரம் பகுதியில் உள்ள பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் போது ஆசிரியர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, செட்டிக்குளம், வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்திற்குள் புகுந்து ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 8.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த போது பாடசாலைக்குள் சென்ற பாடசாலை மாணவன் ஒருவரின் தந்தை உள்ளிட்ட மூவர், பாடசாலை வளாகத்தில் நின்ற ஆங்கில பாட ஆசிரியரான எஸ்.சாந்தகுமார் வயது- 45 என்பவர் மீது கட்டையினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மற்றைய ஆசிரியர்கள் இதனை அவதானித்ததும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்கட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பாடசாலையில் பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதற்றமான நிலமை நிலவி வந்ததுடன் காவல்துறையினர் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.












