எங்கள் இராணுவத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது..! பீரிஸ் இறுமாப்பு
இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் விடுதலை புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வலியுறுத்தல் இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.
இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தும் நடவடிக்கையை ஐ.நா. உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஐ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் இலங்கை இராணுவ அதிகாரிகளைக் கைதுசெய்யுமாறு கோரவோ அல்லது பயணத்தடை விதிக்குமாறு கோரவோ மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆணையாளரின் இந்த அறிவிப்புக்கு எதிராக அரசு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.