இலங்கை மக்களுக்கு ஓர் மகத்தான வாய்ப்பு - எரிக் சொல்ஹெய்ம் விடுத்துள்ள அறிவிப்பு!
பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு பசுமையான பாதையை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது சிறந்த குழுவினருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் மண்சரிவு மற்றும் தீவிர வானிலை அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் அழைப்பின் பேரில் சிறிலங்கா வந்துள்ள சொல்ஹெய்மிடம் ஆங்கில ஊடகமொன்று மின்னஞ்சல் மூலமாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மகத்தான வாய்ப்பு
எவ்வாறாயினும் காலநிலை மாற்றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒரு ஒழுக்கமான நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கும் ‘இது ஒரு மகத்தான வாய்ப்பு’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை மிகவும் வளமான அறிவுசார் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும் மற்ற இந்தியப் பெருங்கடல் நாடுகள், உலகின் பிற நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறது என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

