யுத்த கால பேச்சுவார்த்தைகளில் முக்கிய வகிபாகம் வகித்த எரிக் சொல்ஹெய்மிற்கு சிறிலங்காவிற்கான முக்கிய பதவி!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம், ரணில் விக்ரமசிங்கவுடன் பருவநிலை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணிலின் ஆலோசகர்கள்
அவரோடு மாலைதீவு முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட்டும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச பருவநிலை தொடர்பான ஆலோசனைகளை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த எரிக் சொல்ஹெய்ம், பசுமை பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் பருவநிலை தலைமைத்துவத்திற்கான சிறந்த பார்வை ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் பருவநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொலைநோக்கு பார்வை, ரணிலுக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள்
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தினை நிறுத்துவதற்கான சமாதான பேச்சுக்களில் ஈடுபட்ட முக்கிய நபராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டார்.
இதன் காரணமாக எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் எரிக் சொல்ஹெய்மின் தற்போதைய சிறிலங்கா விஜயம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Good meeting with Ranil Wickremesinghe, Sri Lankan ?? President. The President has a great vision for green economic revocery and for Sri Lankan climate leadership!
— Erik Solheim (@ErikSolheim) October 12, 2022
Proud to be appointed his International Climate Adviser together with @MohamedNasheed @RW_UNP @SriLankaTweet pic.twitter.com/1UnhQOCA4j
யுத்தம் இடம்பெற்ற காலம் முதல் கடந்த 2005 ஆம் ஆண்டு வரை சமாதான பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

