இலங்கைக்கு உதவ முன் வாருங்கள்! சர்வதேச நாடுகளிடம் ஐ.நா வேண்டுகோள்
இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுக்கு அதிக ஆதரவு வழங்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் குழு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயர்ந்த பணவீக்கம், பொருட்களின் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, முடங்கும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவை குறித்து அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்ட உணவு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றின் தட்டுப்பாடுகள் காரணத்தால் கடந்த மாதங்களில் வெடித்த மக்கள் புரட்சியால் நாடு அதிர்ந்துள்ளது.
கொழும்பில் உள்ள முக்கிய அரசாங்க கட்டிடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அவ்வேளை அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் தனது அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருந்தபோதும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறைவு, வரிக் குறைப்புக்கள் மற்றும் சேவைக் கடன் செலுத்துதல் போன்ற பொருளாதார சீர்திருத்தங்களால் நிலைமை சிக்கலானது.
இந்த நெருக்கடி மனித உரிமைகள் மீது கடுமையான தாக்கியுள்ளது. இதனால் உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கான நீண்டகால சீர்குலைவு, நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடன் நெருக்கடியானது மனித உரிமைகளை செயல்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மற்றும் சுதந்திர நிபுணர் அத்தியா வோரிஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு, சர்வதேச நாணய நிதியம் உடனான பேச்சுவார்த்தைகள் உட்பட எந்த செயற்பாடும் மனித உரிமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2019 இல் ஐக்கிய நாடுகளின் ஒரு நிபுணர், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து, வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் அதிகரித்து வரும் நிறுவனக் கடன் பிரச்சினை பற்றி குறிப்பிட்டுள்ளது.
அக் கடனைத் திருப்பிச் செலுத்துவதே நாட்டின் மிகப் பெரிய செலவீனம் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க, மனிதாபிமான முகவர்களிடமிருந்து மட்டுமல்ல, சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குபவர்கள் மற்றும் நாட்டின் உதவிக்கு முன் வர வேண்டிய பிற நாடுகளின் உடனடி கவனம் தேவை என்றும் அக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
