ஒத்துழைப்பு வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தயார்!
கடற்தொழில்துறையை மேம்படுத்துவதற்கு நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வது நாட்டின் கடற்தொழிலாளர்களுக்கும் கடற்தொழில் துறைக்கும் ஆரோக்கியமான எதிர் காலத்தினை உருவாக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான இணைந்த வேலைத்திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா நோர்வே தூதரகம் ஆகியன இணைந்து இன்றைய தினம் ஆரம்பித்திருந்தன.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடற்தொழில் துறையில் இலங்கையும் நேர்வேயும் நீண்டகால பரஸ்பர உறவுகளைக் கொண்டிருப்பதுடன் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் ஆகியவற்றையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன.
அதுமட்டுமல்லாது அதிகளவு கடல் வளங்களைக் கொண்ட தீவாக ஸ்ரீலங்கா காணப்படுவதால் அந்த வளங்களை நிலைபேறான வகையில் பேணுவது அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது.
அதனபடிப்படையில் இத்தகைய ஆய்வுகள் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பிரயோகித்து அந்தத் துறையை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
சவால்கள் நிறைந்த தற்போதைய சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு வழங்கியமைக்காக நோர்வே அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்காவுக்கான நோர்வே தூதுவர் ரைன் ஜோன்லி ஸ்கெண்டல், கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்னாயக்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.