தனியார் விமான சேவையை பலப்படுத்தும் தொழிலதிபரின் முடிவு! புதிய உலக்குவானூர்தி கொள்வனவு
இலங்கையின் முன்னணி அரிசி ஆலை உரிமையாளரும் முதலீட்டாளருமான மித்ரபால லங்கேஸ்வர, நாட்டில் தனது விமானப் போக்குவரத்து வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மேலும் ஒரு உலக்குவானூர்தியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் நாளை அமெரிக்காவுக்கு புறப்பட்டு, அங்கு தயாரிக்கப்படும் குறித்த உலக்குவானூர்தியை இறுதியாக பரிசீலித்து வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உலக்குவானூர்தி ஆய்வு
குறிப்பாக, உலகின் முன்னணி உலக்குவானூர்தி உற்பத்தி நிறுவனமான Robinson Helicopter Company தயாரித்த உலக்குவானூர்தியை ஆய்வு செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Image Credit: Aviation Voice
இதன்படி, அமெரிக்காவுக்கு சென்று திரும்பி வந்த பிறகு மேலதிக தகவல்களை பகிர்வதாக மித்ரபால லங்கேஸ்வர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
வாங்கும் வாய்ப்பு
அண்மையில், தனது விமான சேவைகளை விரிவுபடுத்த புதிய உலக்குவானூர்தியை வாங்கும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக Singapore Airshow 2026 நிகழ்விலும் அவர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே Robinson R66 Turbine உலக்குவானூர்தி ஒன்றை இலங்கையில் தனது வணிக சேவைகளுக்காக மித்ரபால இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் முன்னணி அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி சிறிசேன உலக்குவானூர்தியொன்றை வாங்கும் திட்டத்தை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |