இந்தியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள், 5 சிறுவர்கள் மற்றும் பலாலி அன்ரனிபுரம் பகுதியைச் சேர்ந்த இரு படகோட்டிகள் உள்ளடங்கலாக 13 பேரை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு பிளாஸ்டிக் படகும் இணைப்பு இயந்திரம் மற்றும் எரிபொருள் வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர், கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், அவர்கள் சட்ட நடவடிக்கைக்காக பலாலி காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




