ரஞ்சனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும் மஹிந்தானந்த! ஐ.தே.க மீது கடும் சாடல்
ரஞ்சனிற்கு விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்து நானும் வருத்தப்படுகின்றேன். அவரின் மீதான அனுதாபத்தினால் அவருக்கு எதிராக நான் தொடுத்திருக்கும் 2 வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கின்றேன் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் ரஞ்சன் மேலும் 4வருடங்கள் சிறையில் இருக்கவேண்டிவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சனிற்கு வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கு ஒட்டுமொத்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுமே காரணமாகும்.
அவர்களின் கோரிக்கைக்கமையவே ரஞ்சன் வழக்குகள் தொடர்பில் நீதிபதிகளுடன் உரையாடல்களை மேற்கொண்டிருந்தார். அத்துடன் ரஞ்சனுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியினர் கதைப்பதில் நியாயம் இருக்கின்றது. ஏனெனில் கடந்த அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் தேவைக்காகவே ரஞ்சன் நீதிபதிகளுடன் உரையாடல்களை மேற்கொண்டார்.
அவர்களுக்காக செயற்பட்டதன் விளைவை ரஞ்சன் ராமநாயக்க இன்று அனுபவிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.