மீண்டும் நாடு பேராபத்தை எதிர்கொள்ள நேரிடும்- சவேந்திர சில்வா எச்சரிக்கை!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் எனவும் ஒரு மாதத்துக்கும் அதிக காலம் நாட்டை மூடி கொவிட் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம். மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொவிட் வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுக்குள் வரவில்லை. பொருளாதார பிரச்சினைகளால் நாட்டைத் தொடர்ந்து மூடிவைக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே ஊரடங்கு சட்டத்தை நீக்கினோம். வைத்திய நிபுணர்களின் கூற்றின்படி மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பாட்டால் மீண்டும் கொவிட்டின் பேராபத்தை நாடு எதிர்கொண்டே தீரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாது. கடந்த காலங்கள் முழுவதுமாக மக்கள் வழங்கிய ஆதரவுக்கமைய தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்தக் காலப்பகுதிகளிலும் அதேபோன்று அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்கொண்டு நடத்திச் செல்ல முடியும்.
அதற்கமைய அரச ஊழியர்களின் பணிகள் வழமையான முறையில் மேற்கொள்ளப்படவுள்ள அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.