இலங்கையில் உருமாறிய 3 வைரஸ் வகை கண்டுபிடிப்பு! ஆபத்தான காலகட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய சூழ்நிலையில், 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
மிகவும் அபாயம் மிக்கவை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 4 உருமாறிய வைரஸ்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவும் வைரஸ்களே இவ்வாறு அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரஸ்கள் ஏனைய வைரஸ்களை விட பரவும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும் அதே வேளை, இதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களும் மரணங்களும் அதிகரிப்பதோடு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்துதல் என்பனவே இவை அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்படுவதற்கான காரணமாகும்.
இவை தவிர கொவிட்-19 வைரஸிலிருந்து உருமாறிய நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உலகிலுள்ளன. பிரித்தானியா, தென்ஆபிரிகா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள வைரஸ்கள் இவ்வாறு அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரஸ்கள் இலங்கைக்குள் பரவியுள்ளனவா என்பது தொடர்பில் சுகாதார தரப்பினர் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு இவை இனங்காணப்பட்டால் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எந்த வைரஸ் இனங்காணப்பட்டாலும் அவற்றிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வது அத்தியாவசியமானதாகும். இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ்கள் மிகவும் வேகமாக பரவக் கூடியவையாகும்.
எனவே அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறு எந்த காரணிக்காகவும் வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்வதே இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.