இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா- ஸ்ரீலங்காவிற்குள் நுழைய முற்பட்ட இந்தியர்கள்!
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு கடல் மார்க்கமாக நுழைய முயற்சித்த 86 இந்தியர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இடைமறிக்கப்பட்ட 86 பேரையும் மீண்டும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் இந்தியாவிலிருந்து கடல் வழி மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு நுழைபவர்களினால் கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் இதைக் கட்டுப்படுத்த, கடற்படை ரோந்துப் பணிகளை முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பில் ஸ்ரீலங்கா கடற்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை ஊடகப்பிரிவு கூறியுள்ளது. இந்த நிலையில், பாக்கு நீரிணையில் ஸ்ரீலங்கா கடற்படை நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது 86 பேருடன் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த 11 இந்திய மீன்பிடி படகுகள் இன்று செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மன்னருக்கு தெற்கே மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ரோந்து நடவக்கையின்போது இந்த 11 படகுகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் அளிக்கப்பட்டு 11 இந்திய மீன்பிடிப் படகுகளையும் அதில் பயணித்த 86 பேர்களையும் மீண்டும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு கூறியுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க ஸ்ரீலங்கா கடற்படை வடக்கு மற்றும் வடமேற்கு கடல்களில் ரோந்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.