நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த வர்த்தமானி! அரசியல் பின்னணி தொடர்பில் தற்போது வெளியான தகவல்
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
சில நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் தலைவர்களை பதவிகளில் இருந்து நீக்கும் நோக்கம் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பொது நிறுவனங்கள் தொடர்பான (கோப்) தெரிவுக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அரச கணக்கீடு தொடர்பான (கோபா) தெரிவுக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோரை இந்த தெரிவுக்குழுக்களின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கும் நோக்கில் ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தவிர 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்ட பின்னர், மேற்படி தெரிவுக்குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் கட்சியை சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களை நியமிப்பதில்லை எனவும் உறுப்பினர்களாக கூட நியமிக்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் உறுப்பினர்களாக முற்றாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறைவு செய்தமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று வெளியிட்டிருந்தார்.