இலங்கையில் PayPal நேரடிப் பண பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகப்படுத்த தீர்மானம்
உலகின் முன்னணி இணையவழிப் பணப்பரிவர்த்தனை சேவையான PayPal மூலம் நாட்டிற்கு நேரடியாகப் பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் இந்த சேவையை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வர்த்தக சமூகங்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைசாரா பணப் பரிமாற்ற முறைகளை நம்ப வேண்டியதில்லை
இந்த சேவையை அறிமுகப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் நாட்டின் தனியார் வங்கி அமைப்புகள் இடையே சமீபத்தில் வெற்றிகரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம், வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக உள்ளூர் தொழில்முனைவோர் போலியான வெளிநாட்டு முகவரிகள் அல்லது முறைசாரா பணப் பரிமாற்ற முறைகளை நம்ப வேண்டிய அவசியம் இனி இருக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய அமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர், இணையவழி சேவைகளை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தங்களின் வருமானத்தை நேரடியாக உள்ளூர் வங்கிக் கணக்குகளில் பெற முடியும்.
மேலும், இது நாட்டிற்கான அதிகாரப்பூர்வ அந்நியச் செலாவணி வரவுகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மே 15 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய சேவை, இலங்கையின் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |