கொலையாளியை விடுவித்து ஆட்சியாளர்களினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது - பாரத லக்ஷமனின் மனைவி ஆதங்கம்
பொசன் புனித நாளில் நாட்டில் ஆட்சியாளர்களினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் சுமனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டைமையினை விமர்சித்துள்ள திருமதி சுமனா பிரேமச்சந்திர, பௌத்த மத்தின் விசேட பண்டிகையான புனித பொசன் தினத்தில் ஆட்சியாளர்களினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடாபில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சுமனா,
கொலையாளி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதியை மதிக்காத நாட்டில் சூரிய ஒளி படாது எனவும் ஆட்சியாளர்களினால் நாட்டில் உள்ள நீதித்துறைக்கு உரிய கௌரவம் அளிக்கப்படுவதில்லை எனவும், மேல் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பினை ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டில் துமிந்த சில்வாவிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு அளித்து விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.