இலங்கையின் சுப்ரீம் சட் 1 இற்கு என்ன ஆனது..! செலவின அறிக்கையைக் கோரிய சஜித்
2012 ஆம் ஆண்டு எமது நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சட் 1 (Supreme SAT-1) செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன.
இதற்கு என்ன ஆனது என்பது குறித்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், அதன் செலவின அறிக்கையையும் கோரினார்.
320 மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது

மேலும் உரையாற்றிய அவர், “இந்தியா 2008, 2019 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் முறையே சந்திரயான் 1, 2 மற்றும் 3 என மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக எப்படியோ நிலவை அடைந்தது.
எனினும், இந்த 3 செயல்முறைகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 3 முறை முயற்சித்தும் செலவழித்த பணத்தை விட நம் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் செயற்கைக்கோளுக்கான செலவு அதிகம்.
இதற்காக செலவிடப்பட்ட 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிலவில் இறங்குவது எப்படி போனாலும் நாட்டை வங்குரோத்தாக்குவதற்கு இதுவும் காரணமே” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.