சிங்கப்பூர் போல சிறிலங்கா மாற வேண்டும் - இது விதியின் நகைச்சுவை
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நம் அனைவரின் பிரச்சினை - இது நாட்டின் பிரச்சினை - ஒரு தேசிய பிரச்சினை - நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையாக கருத வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் (Imthiaz Bakeer Markar) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தனது செவ்வியில்,
தமிழ் மக்களின் பிரச்சினையை பெரும்பாலான மக்கள் நோக்கும் பாரம்பரிய முறையில் நான் பார்க்கவில்லை. இந் நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை வெறுமனே தமிழ் மக்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தி நோக்குவதை நான் விரும்பவில்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமுமில்லை.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நம் அனைவரின் பிரச்சினைகளாகவே நான் பார்க்கிறேன். இது நாட்டின் பிரச்சினை. ஒரு தேசிய பிரச்சினை. இது இந் நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை. அனைவரையும் சமமாக நடத்துதல் தொடர்பான அடிப்படை உரிமைகளுடன் தொடர்பான பிரச்சினை. சட்டத்தின் அதிகாரம் தொடர்பான பிரச்சினை.
இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களின் பிரச்சினைகளாகவே நாம் கருத வேண்டும். நாங்கள் ஒரே மனித குடும்பம். நம் உடலில் ஒரு காயம் ஏற்பட்டால், அது முழு உடலையும் பாதிக்கிறது.
எனவே அதனைக் குணப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில அரசியல்வாதிகள், உத்தியோகபூர்வ ஈக்களைப் போல, இந்த காயங்களிலிருந்தே தமது பிழைப்பை தேடி வாழ்கிறார்கள். இந்த பாரம்பரிய அரசியலுக்கு முடிவு காண வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேசம் என்ற இடத்திற்கு நாம் வர வேண்டும். நாம் சிந்திக்கும் முறையை மாற்ற வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணலே மிகப் பிரதானமான விடயமாகும்.
1960 களில் மூன்றாம் உலக நாடாக இருந்த சிங்கப்பூர் இப்போது முதல் தர உலக நாடு. எமது முன்னோர்கள் கூலி வேலையாளர்களின் பூமி என்று அழைத்த சிங்கப்பூர் இன்று தனிநபர் வருமானத்தில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
60 களில் லீ குவான் யூ (Lee Kuan Yew) சிங்கப்பூர் ஒரு நாள் இலங்கையாக மாற வேண்டும். ஆனால் இன்று இலங்கையில் உள்ள எமது பிள்ளைகள் வேலை தேடி சிங்கப்பூர் செல்கிறார்கள். இது விதியின் நகைச்சுவை.
லீ குவான் யூ சிங்கப்பூரைக் கைப்பற்றியபோது, சீன, மலாய் சமூகத்தவர்கள் தமக்கிடையே கொண்று கொள்கின்ற நிலையே காணப்பட்டது.
அவர் நாட்டை ஒற்றுமைப்படுத்தினார். (ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மக்கள்) என்பது அவரது கருப்பொருள். நாமும் நமது நாட்டில் இந்த இன, மதப் பிரச்சினைகளை பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வர வேண்டும். இல்லாத போது நமக்கு எதிர்காலம் இல்லை.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் இப்படி குறுகிய விதத்தில் சிந்தித்தால், எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் எதிர்கால சந்ததியினர் ஏழ்மையான நாட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும். தாமதிக்காமல் நமது சிந்தனை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பிளவுகளை உருவாக்கி ஆதாயம் தேடி அதனடிப்படையில் வாழத் துடிக்கும் அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் வழங்கப்போவது இருண்ட எதிர்காலத்தையேயாகும். இந்த நிலையை அடைவது கடினம் அல்ல. அதற்கு மக்களின் உறுதிப்பாடு தேவை. பரஸ்பர புரிதல் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.