ஜனாதிபதிக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நீதி அமைச்சர்: சிங்கள ராவய கடும் சாடல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினதும் நற்பெயருக்கு அலி சப்ரி களங்கத்தை ஏற்படுத்துகின்றார் என சிங்கள ராவயவின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யவேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. கடந்த ஒன்பது மாதகாலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யமுடிந்தது என்றால், இப்போது மாத்திரம் ஏன் இது பிரச்சினையாக இருக்கின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்ற சர்ச்சையொன்று தற்போது உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் சடலங்களை அங்கிருந்து அகற்றும் வரையில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விலகியிருப்பதற்கு அவ்வைத்தியசாலையில் மருத்துவர் ஒன்றியம் தீர்மானித்திருக்கிறது.
ஏனெனில் சுகாதார நெருக்கடியொன்றின் போது அதுகுறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சுகாதாரப் பணிப்பாளரிடமே காணப்படுகின்றது. அவர் பல மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களுக்கான இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு கராப்பிட்டிய வைத்தியசாலை நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது காலி நீதிமன்றம் அந்த சடலங்களை பிரேத அறையிலேயே வைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதன் விளைவாக பிரேதப் பரிசோதனை வைத்தியர்களிதும் சிற்றூழியர்களினதும் சுகாதாரப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கம் இப்பிரச்சினைக்கு முன்னரே தீர்வு கண்டிருக்க வேண்டும்.
தற்போது இது சமூகத்தின் மத்தியில் வெகுவாகப் பரவிவிட்டது. சடலங்களைத் தகனம் செய்வது குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் இனவாதத்தை நோக்கித் தள்ளப்படலாம் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கின்றார்.
அவ்வாறெனின் இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றி அவருக்கு சில விடயங்கள் தெரிந்திருக்கின்றன. நாட்டில் இல்லாத பிரச்சினைகளை அவர் தோற்றுவிக்கின்றார்.
தற்போதைய அரசாங்கத்தினதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினதும் நற்பெயருக்கு அலி சப்ரி களங்கத்தை ஏற்படுத்துகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.