அப்பாவை விடுதலை செய்யுங்கள்! அரசியல் கைதியின் மகன் உருக்கமான கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாடாளுமன்றிலும் வெளியிலும் அரசியல்வாதிகளும் சிவில் அமைப்புக்களும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் அரசாங்கத்தினால் குறித்த விடயம் தொடர்பில் எந்த ஒரு நல்ல சமிக்ஞைகளும் காட்டப்படாத நிலை தொடர்கிறது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு வடக்கில் வசிக்கும் அரசியல் கைதியான நடேசு குகநாதன் என்பவரின் மகனான குகநாதன் கலையழகன் - நான் மகிழ்வாக எனது கல்வியைத் தொடர நான்கு வயதில் என்னை விட்டு பிரிந்து சிறையில் வாடும் எனது அப்பாவை விடுதலை செய்யுங்கள் என உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றை நாட்டிலிருந்து விரட்டுவதற்கு மீட்பராய் இருங்கள் என அரசாங்கம் நாடு முழுவதிலும் அறிவுறுத்தல் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ள நிலையில், சிறையிலுள்ள தனது கணவர் உள்ளிட்ட கைதிகள் ஒரே அறையில் உள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் அரசியல் கைதியின் மனைவியான குகநாதன் யோகராணி தெரிவித்துள்ளார்.
தனது கணவனின் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த குகநாதன் யோகராணி, எனக்கு இரண்டு பிள்ளைகள், ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார். மற்றவர் தரம் எட்டில் கல்வி கற்கிறார்.
எனது கணவர் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மூன்று வருடம் பூசா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டு ஒருவருட புனர்வாழ்வின் பின் 2013 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு குடும்பவாழ்வில் இணைந்து இருந்தார்.
2013 ஆம் ஆண்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு தனது கணவர் விடுவிக்கப்பட்டபோதும் மீண்டும் நான்கு மாதங்களில் 4 ஆம் மாடியில் 6 நாட்களில் விசாரணை முடித்து விடுகிறோம் என அழைத்துச் சென்றவர்கள் தற்போது வரையில் அவரை சிறையில் வைத்துள்ளனர்.
தற்போதைய கொரோனா நிலைமைகளை கருத்தில் கொண்டு பிணையிலாவது விடுதலை செய்யுங்கள். கடந்த மார்ச் மாதம் மாவட்ட அரசாங்க அதிபரூடாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மீண்டும் நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் செயலாளருக்கும், சிறைச்சாலை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றார்.
இந்நிலையில் நான்கு வயதில் தன்னை விட்டு பிரிந்து சிறையில் வாடும் தனது தந்தை தன்னுடன் இருந்தால் தான் மகிழ்ச்சியாக கல்வியைத் தொடரலாம் என அவரது மகன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை 4 மாத குழந்தையாக தனது தந்தையை பிரிந்த மகள் இன்று வரை தனது அப்பாவின் வருகைக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.