இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை! சிறுமி பலி - பலர் இடப்பெயர்வு
இலங்கையில் கடந்த இரு தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை , வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றின் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரதேச செயலகங்களிலுள்ள 1119 குடும்பங்களைச் சேர்ந்த 5067 நபர்கள் 27 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மண்சரிவு மற்றும் வெள்ள எச்சரிக்கை காரணமாக 200 குடும்பங்களைச் சேர்ந்த 792 நபர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நேற்று மாலை வரை 31 303 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 30 672 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 5 வீடுகள் முழுமையாகவும் 317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.