வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுங்கள்- ஸ்டாலினுக்கு வேண்டுகோள்!
தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை அரசாங்கத்துடன் ஒரு சுமுகமான உறவை பேணி இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்தும் அதேவேளை மலையக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுங்கள் எனவும் இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக தாங்கள் நன்கு அறிந்தவர் என்ற வகையில் எங்களுடைய இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் ஒரு சுமுகமான உறவை பேணி அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
10 வருட நீண்ட கால போராட்டத்தின் பின்பு தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதற்கு மலையக மக்களின் சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய வெற்றி தமிழ் நாட்டு மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் வழங்கியுள்ள வாக்குகளாகும். எனவே அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உங்களுடைய ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கின்றது. அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவர் தமிழ் நாட்டில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டிற்குரியது.
மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இளைஞர் அணி செயலாளராக கட்சி தலைவராக படிப்படியாக வளர்ந்து வந்த ஒரு முதல்வர். அவருடைய தந்தையார் தமிழக மக்களுக்கு மட்டுமன்றி உலக தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் தலைமைத்துவம் கொடுத்தவர். அதனை உணர்ந்து ஸ்டாலின் செயற்பட வேண்டும்.
நீங்கள் தனியே தமிழ் நாட்டிற்கு மாத்திரம் முதல்வராக இல்லாமல் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் எங்கெல்லாம் பரந்து வாழ்கின்றார்களோ அவர்களுக்கு பிரச்சினை என்று வருகின்ற பொழுது குரல் கொடுக்கவும் செயற்படவும் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக இன்று இலங்கையில் வாழுகின்ற தொப்புள் கொடி உறவுகளான மலையக மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்கள்.
இப்படி தஞ்சமடைந்தவர்கள் இன்று பல்வேறு சட்ட சிக்கல்கலை எதிர் நோக்கியுள்ளனர். அவர்களின் விடயத்தில் அதிக கவனம் எடுத்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். நீங்கள் பல சவால்களுக்கு மத்தியிலேயே முதல்வராக கடமையை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதற்கு முகம் கொடுக்க கூடிய துணிவு உங்களிடம் இருக்கின்றது.
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக தாங்கள் நன்கு அறிந்தவர் என்ற வகையில் எங்களுடைய இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் ஒரு சுமுகமான உறவை பேணி அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.