வடக்கு - கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (20.02.2025) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுடன் கூடிய காணிகளை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாடு முழுவதிலும் முப்படையினரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பில் மீண்டும் மதிப்பாய்வு மேற்கொண்டு காணிகளை விடுவிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதிலளித்துள்ளார்.
மேலும், இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வணிகங்களை சுற்றுலாத் துறையில் மேலும் வினைத்திறன் மிக்க முதலீடுகளாக மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வினவினர்.
மதவாதம் மற்றும் இனவாதம்
இதற்கமைய, எதிர்காலத்தில் இது தொடர்பில் ஆய்வு நடத்தி, பொருளாதார நன்மைகளுக்காக அவற்றைப் பயன்படுத்துவது குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சில வழிபாட்டுஸ்தலங்களை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சில உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். மதவாதம் மற்றும் இனவாதம் என்பன அரசியலில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
