இரண்டாவது நாளாக தொடரும் முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்றைய தினம் (12) ஆரம்பித்த காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை இரண்டாவது நாளாக இன்றும் (13) மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.ச பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் இ.போ.ச சாரதி மீதும் பேருந்து நடத்துநர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதில் நடத்துநர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார் .
வேறு சாலைகளும் போராட்டத்திற்கு ஆதரவு
இவ்வாறான நிலையில் உரிய நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தப்படாமையே தங்களது இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என தெரிவித்தும், தமக்கான உரிய நேரங்களை வழங்கி மக்களுக்கான சேவைகளை சரியாக வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இந்த கால வரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் தனியார் பேருந்து குழுவினரால் தாக்கப்பட்ட எமது காப்பாளருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், நேர அட்டவணை பங்கீட்டு நியதிசட்டத்தின் அடிப்படையில் 60: 40 என்ற விகிதத்தில் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய சாலைகளில் இருந்தும் முல்லைத்தீவிற்கான போக்குவரத்து சேவை இன்று(13) இடம்பெறாது என வடமாகாண தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்
முல்லைத்தீவு சாலை பிரதான நுழைவாயில் கதவில் மக்களுக்கு சேவை செய்வது என்ன பிழையா? நேரம் என்ன எங்களுக்கு தடையா?, முல்லைத்தீவு- கொக்கிளாய் 36 KM. இ.போ.சபை கட்டணம் 203 ரூபாய் தனியார் கட்டணம் 250 ரூபாய், வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையாற்றும் முல்லைத்தீவு தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் போன்ற சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை தமக்கான நிரந்தர தீர்வாக 60:40 சேவை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் கிடைக்காமல் தங்களது போராட்டம் நிறுத்தப்படமாட்டாது எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்