வாழ்வாதாரத்திற்காக கொடுக்கப்பட்ட கடை இனம் தெரியாதோரால் தீ வைப்பு!
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குலம் குகனேசபுரம் பகுதியில் குடிசை கைத்தொழில் செய்வதற்கு கட்டப்பட்டிருந்த கடைகளில் இனந்தெரியாதவர்களால் ஒரு கடை எரிக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
குடிசைக் கைத்தொழில் வியபார நிலையம் அமைக்க வழங்கப்பட்ட காணியில் வியாபார நிலையங்களை அமைத்து வந்த நிலையில் திருநாவுக்கரசு திசகரன் என்பவரின் வர்த்த நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவத்தினை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள ஆலங்குலம் மற்றும் குகனேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களுக்கு குடிசைக் கைத்தொழில் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக கொழும்பு பிரதான வீதி அலங்குளம் பகுதியில் வியாபார நிலையங்களை அமைப்பதற்கு ஒருவருக்கு ஆறு பேர்ச் வீதம் 23 குடும்பங்களுக்கு வாகரை பிரதேச செயலகத்தினால் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
தங்களுக்கு வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட காணிக்கு அருகாமையில் உள்ள முஸ்லிம் நபரே அவரது காணிக்குள் நாங்கள் கடைகளை கட்டுவதாக பிரச்சனைப்பட்டு எங்களது கடைகளுக்கு அவரே தீ வைத்திருப்பாரா என சந்தேகிகப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
ஏனெனில், இந்த காணி தனது தந்தையினுடைய ஐந்து ஏக்கர் காணி என்று மீராலெப்பை ஹம்சா என்பவர் பிரதேச செயலகத்தில் முறையிட்டிருந்தார். இருப்பினும் தனக்காக தீர்வு கிடைக்காத பட்சத்தில் திருகோணமலை காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு குறித்த நபர் 2011ம் ஆண்டு முறையிட்டதற்கிணங்க குடும்பத்தில் மூத்த மகன் ஹம்சா என்பவருக்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்பட்டது.
அவரின் சகோதர்கள் மீதம் இருந்த நான்கு ஏக்கர் காணியை கேட்ட போது குறித்த விண்ணப்பதாரிகளுக்கு வேறு பிரதேசத்தில் எந்த காணியும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குளம் பகுதியில் 16 பேரும் காணி கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே மீராலெப்பை ஹம்சாவுக்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் காணிக்குள் புதிதாக காணி வழங்கப்பட்ட நபர்களில் ஒருவரது காணி உள்ளதாக தெரிவித்து வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தன்மீது வீண்பழி சுமந்தும் வகையில் குடிசையை அவர்களே தீயிட்டு விட்டு தன்னை குற்றம் சுமத்துவதாக மீராலெப்பை ஹம்சா தெரிவித்தார்.
குறித்த பகுதியில் காணிக்காக விண்ணப்பித்துள்ள மீராலெப்பை முபாறக் கருத்து தெரிவிக்கையில்,
காணி எங்களது தந்தையின் காணி என்றும் முறைப்படி எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை என்று தெரிவித்ததுடன், தமிழ் சகோதரர்கள் காணி பிடிக்கின்றார்கள் என்று எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்குரிய உரிமை எனக்கு கிடைத்தால் போதும்.
அரச அதிகாரிகள் இன ரீதியான பிரச்சினைகளை வழக்காமல் நீயாயமான முறையில் தீர்வு வழங்கி இரு சாராரையும் இப்பகுதியில் ஒற்றுமையாக வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதுடன், அவர்களுக்கான நிரந்தர தீர்வு கிடைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.













