பாடசாலைகள் மூடப்பட்டநிலையில் - மாணவர்களுக்காக கல்வியமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடையலாம். பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வரும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை, நாட்டிலுள்ள சகல இந்து அறநெறிப் பாடசாலைகளையும், மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான சுற்றுநிருபம் இந்து கலாசார திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார விவகார அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் இராமச்சந்திர குருக்கள் பாபுஷர்மா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.