அதிபர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் - காவல்துறை அசமந்தம்
பாடசாலை அதிபர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து சூரியவெவ காவல்துறையில் முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மாணவனின் பெற்றோர் முறைப்பாடு
சம்பந்தப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகிப்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

16 வயதுடைய குறித்த மாணவன், கடந்த 8 நாட்களாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
சூரியவெவ காவல்துறையினரால் தமது பிள்ளைக்கு நீதி கிடைக்காத காரணத்தினால், மாத்தறை - ஹம்பாந்தோட்டை இரு திசைகளுக்கும் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக மாணவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது
பிள்ளை ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர, இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடமும் முறைப்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |