நோயாளர்களை சவப்பெட்டிக்கு அனுப்பும் இலங்கை - உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார் ஜாமுனி கமந்த துஷார
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் தற்போது அவர்களது மரண சான்றிதழ்களை எழுதிக் கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழல் மோசடிக்கு எதிரான பிரஜைகள் பலம் தலைவர் ஜாமுனி கமந்த துஷார தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் தரமற்ற மருந்துப் பொருட்களால் அண்மைய நாட்களில் பல மரணங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில், நோயாளர்களை சவப்பெட்டிக்கு அனுப்பும் வகையில் சுகாதார அமைச்சு தற்போது செயற்படுவதாகக் கூறி, அமைச்சுக்கு முன்பதாக நேற்று ஊழல் மோசடிக்கு எதிரான பிரஜைகள் பலம் எனும் அமைப்பால் சத்தியாகிரக போராட்டமொன்று நடத்தப்பட்டது.
சத்தியாகிரக போராட்டம்
இதன்போதே ஜாமுனி கமந்த துஷார மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து அதிபருடன் கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க நாம் திட்டமிட்டிருந்தோம். எனினும், அதற்கான வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை.
சுகாதார அமைச்சு இந்தியாவிலிருந்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதன் ஊடாக நோயாளர்கள் உயிரிழக்கக்கூடுமென நாம் ஏற்கனவே எச்சரித்திருந்தோம்.
இதனை பொருட்படுத்ததாது அனைவரும் சுயநலமாக செயல்பட்டனர். இதனால் தற்போது இலங்கை மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போயுள்ளது.
மிரட்டல்களுக்கு அஞ்சோம்

இந்த நிலையில், தாம் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனை எதிர்க்கும் வகையிலேயே, சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அவரால் தனது கடமையை செய்ய முடியாவிடில் அவர் பதவி விலக வேண்டும். சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்.
சுகாதார அமைச்சின் கவனயின்மை காரணமாக மக்கள் உயிரிழைப்பது இங்கு யாருக்கும் தெரியவில்லை.
அதற்காக நாம் போராடுவது தற்போது காவல்துறையினருக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. காவல்துறையினரின் மிரட்டல்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை” - என்றார்.