வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
அத்தியாவசியமற்ற பயணங்களை அதிகளவு தவிர்த்துக்கொண்டால் அடுத்த நான்கு வாரங்களில், தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் தொடர்ந்து நிலவி வருகின்றமையினால், ஒருவர் குறைந்தது இரண்டு முகக்கவசங்களை அணிந்து, வீட்டை விட்டு வெளியேறுவதனை வழக்கமாக கொண்டு வாருங்கள்.
அத்தியாவசியமற்ற பயணங்களையும் அதிகளவு தவிர்த்துக்கொண்டால் அடுத்த நான்கு வாரங்களில், தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
கம்பஹா, களுத்துறை, கொழும்பு, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஆகவே இந்த மாவட்டங்களுக்கே தடுப்பூசி போடுவதற்கு முதலில் முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளோம். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசியாகும் என்றார்.