திருகோணமலை கன்னியாவுக்கு சுமந்திரன் திடீர் விஜயம்
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றப் பகுதிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (04) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அங்கு உள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் சிலையினையும் பார்வையிட்டிருந்தார்.
அவருடன் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பிரசன்னமாகியிருந்தார்.
தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (04) பார்வையிட்டதுடன் குறித்த ஆலயத்தின் அறங்காவலரும் தர்மகர்த்தாவுமாகிய கோகிலரமணியுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

குறித்த காணியில் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதனை நிறுத்தக் கோரும் விண்ணப்பம் உள்ளிட்ட பல விண்ணப்பங்களைக் கோரி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 29.07.2019 அன்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடியிருந்தார்.
நிபந்தனைகளுடன் வந்த இணக்கப்பாடு
இந்த வழக்கானது குறித்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் வழங்கப்படுகின்ற 10 பேர்ச் காணியில் பிள்ளையார் கோவிலை கட்டி பிள்ளையார் சிலையை அமைக்கலாம் என்ற நிபந்தனை உள்ளடங்கலாக 6 நிபந்தனைகளுடன் 19.03.2021 அன்று இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



