இலங்கையின் எதிர்காலம் குறித்து போலியான கதை - கடுமையாக விமர்சிக்கும் பிரீஸ்
இலங்கையில் அடுத்த நாள் உயிருடன் இருப்பதையே கேள்விக்குறியாக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், 2048 ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்காலம் குறித்து போலியான கதைகளை கட்டுவதாக சுயாதீமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவான சுதந்திர மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ், நாட்டின் அதிகாரத்தை அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வெளியிட்ட கருத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான நடவடிக்கை

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம், அதிபர் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இன்னும் 365 நாட்களே உள்ளன. அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.
தேர்தல் காலம் தற்போது ஆரம்பமாகவுள்ளது. தற்போதுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மேலும் 12 ஆண்டுகள் அதிகாரத்தை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நேற்றுமுன்தினம் குறிப்பிட்டிருந்தார்.
வீழ்ச்சி கண்டிருந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை ரணிலும் அவரின் அரசாங்கமும் மீட்டெடுத்து அதியசத்தை நிகழ்த்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவருக்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். எனினும் இது முற்றுமுழுதாக மாயை. நூற்றுக்கு நூறு வீதம் மாயை. இதில் எந்தவொரு உண்மையும் இல்லை.
இன்று மக்கள் படும் துன்பம் போன்று இதற்கு எமது வரலாற்றில் எப்போதும் மக்கள் எதிர்கொள்ளவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் இன்று துன்பத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மக்களின் அபிப்பிராயம்

இந்த அரசாங்கத்தின் கொள்கை காரணமாகவே மக்கள் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது ஆரம்பமாகியுள்ள தேர்தல் காலத்தில், மக்களின் அபிப்பிராயம் என்பது, தற்போது இருக்கும் தலைமை மற்றும் அவர் தலைமையிலான அரசின் கொள்கையை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஆணை வழங்க வேண்டும் என்பது அல்ல.
இதனை முடியுமான விரைவில் தடுத்து நிறுத்துவதற்கு, இந்த சாபத்தை முடிவுக்கு கொண்டுவந்து, மக்களின் அபிலாரஷகளை பூர்த்தி செய்ய கூடிய புதிய அரசை அதிகாரத்தில் அமர்த்துவதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” - என்றார்.