உணவகங்களில் இருந்து விடைபெறும் பால்மா தேநீர்
உணவகங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பால்மா தேநீர் வழங்குவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,(Asela Sampath) பால்மாவின் விலை அதிகரிப்பால் பால்மா தேநீரின் விலையை மேலும் அதிகரிக்க முடியாது என்பதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
பால் மா பொதி ஒன்றின் விலை மேலும் 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பால் மா நிறுவனங்களால் ஒரு கிலோ பால் மாவின் விலையை 1345 ரூபாவாக அதிகரிக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பால் மா நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை காரணமாக சுமார் 3000 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.