இராணுவத்தினர் ரோந்துப் பணியிலிருக்கும் போதே யாழில் இடம்பெற்ற வன்முறை!
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களுடன் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்களையும் வாளினை காட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கோப்பாய் சந்தியில் இராணுவத்தினர் வீதிரோந்து காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சமூகவிரோத கும்பலே இந்த செயலலை செய்துள்ளது.
கடந்த வாரம் காவல்துறைமா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ள நிலையிலும் வட மாகாணத்தின் புதிய ஆளுநர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் தொடர்பில் காவல் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்திற்கு பழிவாங்க இளைஞன் ஒருவர் ஆவா கைக்கூலிகளை அமர்த்தி தமது வீட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழகடை வியாபாரம் நிலையமும் சேதமாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கம் வீட்டுக்கு அருகில் உள்ள இளைஞனுக்கும் இடையில் சிறு வாய்த்தர்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவா எனப்படும் கைக்கூலிகளை அமர்த்தி இந்த வன்செயலை புரியவைத்துள்ளார். இந்த சம்பவத்தில் வீட்டு யன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் ஹயஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் வயது 58 என்ற முதியவர் வன்முறை கும்பலின் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தினை மேற்கொண்ட குழுவினர் வந்த மோட்டார் சைக்கிள் இலக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாள்கள், கூரிய ஆயுதங்கள், மற்றும் கூரிய கண்ணாடி ஆயுதங்களுடன் வந்தவர்கள் வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.