ஊரடங்குவேளை அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு -இருவர் படுகாயம்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் படு காயமடைந்துள்ளனர்.
பாலமுனை பிரதான வீதியிலுள்ள சதாம் குறுக்கு வீதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இன்னுமொருவரினால் வழி மறிக்கப்பட்டு இருவருக்கிடையில் வாய்த்தகராறு இடம் பெற்று பின்னர் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பாலமுனை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஏ.எம்.பஸ்ர் என்பவரும் பாலமுனை ஆர்.டி.எஸ்.வீதியைச் சேர்ந்த எஸ்.சாகீர் என்பவரும் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
சம்பவ இடத்துக்கு சென்ற காத்தான்குடி காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரை தேடி வருவதாகவும் காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.