இந்தியா - தமிழர் இடையே கலாசார பரிமாற்றத்தின் அடையாளம் -யாழில் இந்திய வெளிவிவகார செயலாளர் பெருமிதம்
இந்தியா மற்றும் யாழ்ப்பாண தமிழர்களுக்கிடையில் கலாசார பரிமாற்றத்தின் அடையாளமாக யாழ் கலாசார மத்திய நிலையம் விளங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அவர் இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நகரத்திற்கு மீண்டும் வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 2011 இல் இருந்து 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல முறை இங்கு விஜயம் செய்துள்ளேன். இந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தை சுற்றிப் பார்ப்பதற்கு வருகை தந்துள்ளேன்.
இந்தியா மற்றும் தமிழர்களுக்கிடையில் கலாசார பரிமாற்றத்தின் அடையாளமாக இது காணப்படுகின்றது. அந்த கட்டடத்தில் பல் நோக்கு மண்டபம், நூலக வசதி, சங்கீதம், சித்திரம் போன்றவற்றை கற்பதற்கான வகுப்பறை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கலாசார மண்டபம் யாழ் தமிழ் மக்கள் தமது கலாசாரத்துடன் இணைந்து கொள்வதற்கு பாரிய ஊடகமாக இருக்கப் போகின்றது. கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கட்டடத்தின் பராமரிப்பு செலவினையும் இந்தியாவே பொறுப்பேற்க உள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கலாசார மத்திய நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்வதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.